மரபணு கத்தரிக்காய்

மரபணு கத்தரிக்காய்
பெங்களூரு:மரபணு கத்தரிக்காயை வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்ப்பாளர்களின் கடும் கூச்சலால், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கோபமடைந்தார்.அமெரிக்க விதை நிறுவனமான, "மான்சான்டோ' ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை, வர்த்தக ரீதியாக சந்தைக்கு கொண்டு செல்வதற்கு, பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி., கத்தரிக்காயால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து பல தரப்பட்ட வல்லுனர்களை கொண்டு, மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசுவதை கவனிக்க மாட்டேன் என கூச்சல் போட்டார்.


மூன்றரை மணி நேரம் நீடித்த இந்த விவாதத்தின் போது, கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், "அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அமெரிக்க நிறுவனமான மான்சான்டோவின் பிரதிநிதி' என தெரிவித்தார்.இதனால் பொறுமையிழந்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:நான் மான்சான்டோ நிறுவனத்தின் பிரதிநிதி அல்ல. பி.டி., விவகாரம் குறித்து தெளிவான விளக்கம் பெற, உங்களுக்கு உதவி தேவை என நினைக்கிறேன். இவ்வாறு காரசார விவாதம் நடைபெற, இது பார்லிமென்ட் இல்லை. நான் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு ஆதரவானவன் என்ற தவறான குற்றச்சாட்டுகளை பொறுத்துக் கொள்ள மாட்டேன்.


கெஜட் அறிவிப்பில், பட்டியலிடப்பட்ட பொருட்களை, தேசிய உயிரி தொழில்நுட்ப ஆணையத்திடம் இருந்து அனுமதி பெறாமல் ஏற்றுமதி செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தவறான புரளிகள் கிளப்பி விடப்படுகின்றன. எனக்கு அறிவியல் ரீதியான பங்களிப்பே அவசியம்; அரசியல் ரீதியான பங்களிப்பு தேவையில்லை.


மொபைல் போன்ற தொழில்நுட்பங்களை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளும் போது, மரபணு மாற்றப்பட்ட பயிர் தொழில்நுட்பத்தை எதிர்ப்பது ஏன் என, விஞ்ஞானி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் அறிமுகப்படுத்துவது குறித்து, வரும் 10ம் தேதி முடிவு எடுக்கப்படும். அது, அறிவியல் மற்றும் சமுதாயத்தை சமநிலைப்படுத்துவதாக இருக்கும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

உங்கள் கருத்தை மெயில் செய்யவும்

No comments:

Post a Comment